Monday, May 21, 2012

சினிமா

வழக்கு எண் 18 /9


வர்க்க உண்மை பேசும்

அபூர்வத் தமிழ் சினிமா...


“இத... இத... இதத்தான் எதிர்பார்த்தோம்!” - என்று இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் வழக்கு எண் 18/9 படம் பார்த்த கையோடு தொலைபேசியில் சொன்னேன். அவர் எப்போதும்போல கலகலவென வெடித்துச் சிரித்தார், பதிலாக. ஆமாம். பாலாஜி சக்திவேல் அதிகம் பேசமாட்டார். ஆனால் தனது படங்களில் அவர் நிறையப் பேசுவார். காதல் படத்தைத் தொடர்ந்து அவரது இந்த வழக்கு எண் தமிழ் சினிமா வரலாற்றில் நிச்சயமாக ஒரு மைல் கல்தான். பொதுவாக நம்ம ஊர் சினிமா கிராம வாழ்க்கையைப் பேசியிருக்கிறது, நகர வாழ்க்கையைப் பேசியிருக்கிறது. ஏழை-பணக்காரன் வித்தியாசத்தை விதவிதமாய்ப் பேசியிருக்கிறது. இது ஆதிநாள் தொட்டே தொடர்கிற நடைமுறை. ஆனால் இந்தப் படத்தில் வந்துள்ளதுபோல சமூக யதார்த்தமான-சமூக நிஜமான  வர்க்க வேறுபாடுகளை, அவற்றினூடாக நிலவுகிற முரண் மோதல்களை, வாஞ்சைகளை, வஞ்சனை சூழ்ச்சிகளை இத்தனைக் கலை நயத்தோடு, இத்தனை யதார்த்தமாகச் சித்தரித்த இன்னொரு தமிழ்ப் படத்தை யாராலும் சொல்லமுடியாது என்பதுதான் இந்த வழக்கின் தனிச் சிறப்பு.
வயிற்றுப் பாட்டுக்காக உழைக்கவே நேரம் போதாத எளிய மக்களிடையே இயற்கையாக மலரும் காதல் எத்தகைய தூய தன்மை கொண்டது என்பதையும், உயர் வர்க்க, மத்திய வர்க்கப் பிள்ளைகளின் காதல் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதையும் துல்லியமாக வேறுபடுத்திக் காட்டுகிறார் இயக்குநர். விடலைப் பருவம் என்பது எத்தகைய ஆபத்துக்கள் நிரம்பியதாக இன்றைக்கு ஆகிப்போயிருக்கிறது என்றும் இந்தப் படம் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கிறது.  காதலைச் சொல்லுகிறபோதே சமூகத்தில் அதிகார வர்க்கமென்பது பணக்காரர்களுக்கே சேவகம் செய்யும் என்ற நிஜமும் பேசுகிறது. முதலாளித்துவ அரசியல் என்பது எத்தனை வஞ்சகம் நிறைந்தது என்பதைப் பட்டவர்த்தனப்படுத்துகிறது. இத்தனையையும் எளிமையாக, புரிகிற விதத்தில் சொன்னது மட்டுமல்ல, பெரும்பாலும் சினிமா மொழியில் சொல்லியிருப்பது தமிழ் சினிமாவை உண்மையிலேயே ஒரு ஆரோக்கியமான திசையில் கொண்டுசெல்ல நினைக்கும் இளம் இயக்குநர் கள் எல்லோருக்குமே ஒரு உந்துசக்தியைத் தருவதாக இந்தப் படம் அமைந்துவிட்டது.
இந்தப் படத்தில் இன்னொரு புதுமை என்னவென்றால், நடித்துள்ள அத்தனைபேரும் புதுமுகங்கள். இதனால் படத்தின்மீதான நம்பகத்தன்மை கூடுகிறது. பார்வையாளர்களுக்கு தாங்கள் ஒரு சினிமாவைப் பார்க்கிற உணர்வை விடவும், நடக்கிற சம்பவங்களை அதனருகிலிருந்து வேடிக்கை பார்க்கிற உணர்வையே இயக்குநர் ஏற்படுத்திவிடுகிறார். இது கலையை முழுமையாகக் கிரகித்துக்கொள்ள ரசிகர்களுக்குத் துணை செய்கிறது. எனவே அது எல்லோரையும் படத்துடன் ஒன்றிப்போகச் செய்கிறது.
கதையும் எளிய தன்மையில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கந்துவட்டிக்கொடுமைக்கு ஆளாகும் கூலி உழைப்பாளியின் மகன் அதிலிருந்து பெற்றோரை மீட்கவேண்டி தனது படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வடநாட்டு முறுக்குக் கம்பெனிக்கு விலை போகிறான். அவன்தான் கதையின் நாயகன் வேலு (அறிமுகம் ஸ்ரீ). அங்கே நடக்கும் கொடுமைகளிலேயே பெரியதான, தனது பெற்றோர் ஊரில் இறந்த செய்தியைக்கூடத் தெரிவிக்காத சுரண்டல் லாப வெறிக் கயவர்களிட மிருந்து தப்பி சென்னை வரும் அவனைக் காப்பாற்றி, தெருவோர இட்டிலிக்கடையில் வேலைக்கும் சேர்த்து விடுகிறாள் பாலியல் தொழிலாளி ஒருத்தி. பக்கத்து அப்பார்ட்மென்ட் வீடு ஒன்றில் வேலை செய்யும் கதையின் நாயகி ஜோதியுடன் (அறிமுகம் ஊர்மிளா மகந்தா) முதலில் மோதலும் பின்னர் ஒருதலைக் காதலுமாக நகரும் தெருவோர வாழ்க்கையில் மணம் வீச வந்துசேர்கிறான் கிராமத்தில் கூத்துக்கலைஞனாகக் குப்பைகொட்ட வழியில்லாத சின்னச்சாமி. ஜோதி வேலை செய்யும் வீட்டைச் சேர்ந்த பள்ளி மாணவி ஆர்த்தியைச் (மணீஷா) சுற்றிச்சுற்றி வந்து, மிகவும் நாகரிகமாகக் காதலிப்பதாகப் போக்குக் காட்டி, மனமெங்கும் விடலையில் திசை மாறும் வக்கிரத்தைச் சுமந்து வருகிறான் தினேஷ்(மிதுன் முரளி). ஜோதி மீதான ஏழை வேலுவின் காதலுக்கு கருணை உள்ளம் கொண்ட அவளை அவன் இறந்துபோன தன் தாயின் வடிவில் பார்ப்பது காரணமாகக் காட்டப் படுகிறது. இதன் மூலம் நயவஞ்சனை அண்டமுடியாத ஏழைகளின் வெள்ளை மனம் நயமாகப் பதிவு செய்யப்படுகிறது. மறுபக்கம், பணக்கார வர்க்கத்து விடலைப் பையன் தினேஷ், தான் காதலிப்பதாக ஏமாற்றும் ஆர்த்தியைத் தனது கைப்பேசியில் ஆபாசப் படமெடுத்து நண்பர்களுக்குக் காட்டும் வக்கிர மனசுக்காரனாகக் காட்டப்படுகிறான். பண பலமும் அரசியல் செல் வாக்கும் உள்ள தினேஷின் தாய் பகட்டாக வருகிறார். தவறான நடத்தை உள்ள அவர் தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் வேறு.
தினேஷின் திட்டம் ஆர்த்திக்குத் தெரியவர, அவனிடமிருந்து ஒதுங்கும் அவளைப் பழி வாங்க எண்ணும் அவன், அவளது முகத்தில் அமிலத்தை வீச முயல்கிறான். அது தவறுதலாக வேலைக்காரி யான ஜோதி முகத்தின் ஒரு பக்கத்தைச் சிதைக்கிறது. போலீஸ் கேசில் சந்தேகத்தின் பேரில் வேலு சிக்கவைக்கப்படுகிறான். உண்மைக் குற்றவாளி யார் எனத் தெரிந்தும் அரசியல், பணபலம் இவற்றின் தலையீட்டுக்குக் காவல்துறை எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறது, பலன் பெறுகிறது என்பதையும், அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் நயவஞ்சக நாடகமாடி ஏழைகளின் வாழ்க்கையோடு விளையாடுகிறது என்பதையும் படு இயல்பாகச் சொல்கிறது படத்தின் பிற்பகுதி. ஜோதி எடுக்கும் அந்த முடிவால் இறுதிக்காட்சி எதிர்பாராத இறுக்கத்தோடு நம் மனதை உலுக்கிவிடுகிறது.
படத்தில் இயக்குநரின் பங்களிப்பு அபாரமானது. கந்துவட்டிக்காரன் மிரட்டிவிட்டுப்போகிற போது பின்னணியில் “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடல் ஒலிக்கிறதாகட்டும், படிப்பைக் கை கழுவிவிட்டு வேலு ஊரை விட்டுப்போகிறபோது கல்வி பற்றிய அரசு விளம்பரத்தைக் காட்டுவதாகட்டும், வயிற்றுப்பாட்டுக்கே நடுத்தெருவில் லோல் பட்டுக்கொண்டிருக்கும் ஏழைகளின் மத்தியில் எதையுமே பொருட்படுத்தாமல் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நடுத்தர வர்க்க மனிதரை ஃபிரேமின் ஒரு ஓரத்தில் காட்டுவதாகட்டும், பள்ளித் தாளாளரான பணக்காரப் பெண் மந்திரியுடன் போனில் பேசும்போது பின்னால் சுவற்றில் முறைகேட்டுச் சாமியார் படத்தை வைத்தவிதமாகட்டும்... இப்படி காட்சிக்குக் காட்சி இயக்குநரின் கவனம் படத்தின் தரத்தையும் கதை சொல்லும் கலையின் நேர்த்தியையும் உயரங் களுக்கு எடுத்துச்செல்கிறது. அதிலும் சிகரம் வைத்தது மாதிரி, பாலியல் தொழிலை வேலுவின் அன்பான வேண்டுகோளுக்காக விட்டுவிடும் காட்சியில் அந்தப் பெண் நடந்துபோகையில் காலில் ‘யூஸ் அன்ட் த்ரோ’ டம்ளரை மிதித்து நசுக்கிவிட்டுப்போகிறாள். பொதுவாக பிளாஸ்டிக் பொருட் களைப் பயன்படுத்திவிட்டால் அதனைக் கசக்கித்தான் குப்பைத்தொட்டியில் போடவேண்டும். இது நம்மவர்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது. ஏன் கசக்கிப் போடவேண்டுமென்றால், யாரேனும் மீண்டும் அதை எடுத்துப் பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக. இந்த இடத்தில் மறுபடியும் பாலியல் தொழிலுக்காகத் தன்னை யாரும் பயன்படுத்திவிடக் கூடாது என்று அந்தப் பெண் சொல்லாமல் சொல்வதுபோல ஒரு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் டம்ளரை மிதித்து விட்டுப்போவதாகக் காட்டிய உத்தியால் இயக்குநரின் சினிமா மொழி குறித்தான புரிதலையும்,  அவரிடம் பொதிந்துகிடக்கும் சமூக அக்கறையையும் உணரமுடிகிறது.
இயக்குநர் பாலாஜி சக்திவேலுவுக்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய் மில்ட்டன் காட்சிகளை கதையின் தன்மைக்கேற்ப படு யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார். எரியும் அடுப்புக்குள்ளிருந்து சட்டியைக் காட்டுவதும், குடத்துக்குள்ளிருந்து தண்ணீர் நிரப்பும் குழாயைத் தரிசிக்கவிடுவதும் போன்ற புத்தம் புதிய கோணங்கள் படம் முழுவதும் புது அனுபவங்களைத் தருகின்றன. அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னாவும் ஒத்துழைக்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு மகுடம் இந்த வழக்கு எண் 18/9. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தச் சமுதாயத்தின் மீதான கலைஞனின் அக்கறை மிகுந்த கோபத்தை சமீப காலத்தில் வேறு யாரும்  இந்தளவு கலை நேர்த்தியுடன் தமிழ் சினிமாவில் சொல்லவில்லை என்னும் நிஜத்தி லிருந்தே நாம் இந்த வழக்கு எண்ணைக் கொண்டாட வேண்டும், கண்டிப்பாகக் குடும்பத்துடன்  தியேட்டர்களுக்குப்போய்ப் படம் பார்ப்பதன் வாயிலாக... தமிழ் வாழ்க்கை வாழும் தமிழ் மனிதர் களை உலவவிட்ட இயக்குநர் பாலாஜி சக்திவேலுவுக்கு ரசிகர்களின் சார்பில் நன்றி சொல்லியபடி!

- சோழ. நாகராஜன்             



  
   

2 comments:

  1. நண்பரே...இப்படத்தை நானும் கொண்டாடி பதிவு போட்டிருந்தேன்.
    உங்கள் பதிவை படிக்கும் போது... நீங்கள் பாலாஜி சக்திவேல் நண்பர் எனப்புரிந்து கொண்டேன்.
    அவரது கைபேசி எண் அவரிடம் கேட்டு தர முடியுமா?
    எனது எண் 90039 17667

    உங்களுக்கு கமெண்ட் போட பெரிதும் இடைஞ்சலாக இருக்கும் வேர்டு வெரிபிகேசனை தயவு செய்து எடுத்து விடவும்.

    ReplyDelete
  2. சரி நண்பா... நன்றி.

    ReplyDelete